திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.10 இராமேச்சுரம்
பண் - காந்தாரபஞ்சமம்
அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
1
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.
2
மானன நோக்கிவை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.
3
உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.
4
ஊறடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
ஏறடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.
5
அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.
6
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.
7
பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.
10
பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனை
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.101 இராமேச்சுரம்
பண் - சாதாரி
திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.
1
பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.
2
அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியும் இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.
3
மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.
4
சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்
ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.
5
கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகானல் இராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.
6
நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.
7
பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே.
8
கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெளி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.
9
பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.
10
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியால் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com